அடடே மனோகர்
ஆன்மீகப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 நவம்பர், 2009

(41) இத்தரை மீது எது வந்தாலும்



தாளம்: ஆதி
ராகம் :தெம்மாங்கு

இத்தரை மீது எது வந்தாலும்
சிரிச்சிகிட்டேயிருப்போம் – நாம்ப
சிரிச்சிகிட்டேயிருப்போம்

பத்தியங்கள் ஏதும் சத்தியமாயில்லை
பளிச்சின்னு சிரிச்சிருக்க
சித்திரை வெய்யிலிலும் சிரிப்போம் நாம்ப
மார்கழி குளிரிலும் சிரிப்போம் (இத்தரை)

புத்தன், ஏசு போன்ற புண்ணிய
புருஷங்க சிரிச்சதும் சிரிப்புதான்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொண்ணு
செஞ்ச கிழவர் சிரிச்சதும் சிரிப்புதான்
முத்து முத்தா வியர்வை உடலெங்கும் பூக்க
உழைக்கும் போதும் சிரிப்போம்
வைத்தியரும் வியாதியும் விலகி ஓடணும்னா
விலா நோக சிரிப்போம் (இத்தரை)

பணமும் பதவியும் வேணாம்
பதவிசாக சிரிக்க
கனமில்லாத மனம் ஒண்ணு போதும்
கலகலன்னு சிரிக்க
சினம் சிதைய சிரிப்போம்
சிந்தனை சிறக்க சிரிப்போம்
குணம் கூட சிரிப்போம்; நம்
குறைகள் குறைய சிரிப்போம் (இத்தரை)

சுளிக்காத முகமும் சலிக்காத மனமும்
வலிக்காத உடலும் வேணுமா
களிப்போம், ரசிப்போம், மகிழ்வோம்.
சிரிப்போம் சிரிச்சிகிட்டேயிருப்போம்,
நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்
நாம்ப சிரிச்சிகிட்டேயிருப்போம்.


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

88 என்னில் நான் கரையும் நாள்



தாளம் : மிஸ்ரசாபு
ராகம் : முகாரி

என்னில் நான் கரையும் நாள்
எந்நாளோ அறியேன் இம்
மண்ணில் வந்து பிறந்த
மர்மமும் தெரியேன்
(என்னில்)
கண்ணில் தெரியும் அனைத்தும்
கணத்தில் மறையும் மாயை
எண்ணில் மாளாதிங்கு
எட்டியோர் எமன் வாயை
(என்னில்)
எடைபோட்டு பார்த்த போது
எண்ணியது நடந்ததில்லை
படைத்தவன் கணக்கு பற்றி
போதிய விளக்கமில்லை
கிடைத்ததில் களிப்படைந்தால்
கிஞ்சித்தும் இல்லை தொல்லை
கடைவிரித்திதை கூறினாலும்
கொள்ளுவார் எவருமில்லை
(என்னில்)


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

70 நடப்பது பற்றிய கவனமின்றி



தாளம் : ஆதி ராகம் : ஜோன்புரி

நடப்பது பற்றிய கவனமின்றி நாம்
நடந்ததை நினைத்து மயங்குகின்றோம்; அன்றி
நடக்குமென்று எண்ணி கலங்குகின்றோம் வாழ்வில்
... நட
கிடப்பதும் நடப்பதும் கடவுள் அவன் அருளால்
மடத்தனம் தன்னாலென மனிதன் நினைத்தால்
... நட
உண்ணும் போது நாம் உண்ணுவதில்லை
உறங்கும் போதும் நாம் உறங்குவதில்லை
கண்ணும் கருத்தும் செய்யும் கருமத்தில் இல்லை
கவனத்தில் இது இருந்தால் கனிவது இன்பத்தின் எல்லை
... நட

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

76 நல்ல நாளென்று ஒரு நாள்



தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : கல்யாண வசந்தம்

நல்ல நாளென்று ஒரு நாள் தனியே
இல்லை நாதன் படைப்பில்
... நல்ல
வல்லவனுக்கு கேவலம் ஓர் புல்லும் ஆயுதமே
நல்லவனுக்கிங்கே எல்லா நாட்களும் நல்ல நாட்களே
... நல்ல
யார் நல்லவரென்றால் நான் நல்லவன் என்று
மார்தட்டிக் கொள்ளாதோர் நல்லவரே
பார் முழுதும் தன் நாடென்றும் வீடென்றும்
கருதுவோர் யாவரும் நல்லவரே
கார்மேகம் போல வாரி வழங்கும்
கொடையில் சிறந்தோர் நல்லவரே
சீர்தூக்கிப்பார்க்காது சகலரையும்
சமமாய் நேசிப்போர் யாவரும் நல்லவரே!
... நல்ல


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

8 நாட்டை ஆண்டாலென்ன



தாளம் : ஆதி ராகம் : பேகடா

நாட்டை ஆண்டாலென்ன; கோட்டை பிடித்தாலென்ன
காட்டை நோக்கிய பயணம் நம் வாழ்வு - சுடுகாட்டை
... நாட்
ஓட்டை வீடு உடல் ஒன்பது வாசல் அதிலே
பூட்டை பூட்டிய முதல்வன் சாவியை வைத்ததெதிலே
... நாட்
புரியாத புதிர்கள் இப்புவியில் உண்டு கோடி கோடி
சரியான விடையை அதற்கு சளைக்காமல் தேடித் தேடி
அரிதான இப்பிறவி அழியுமே மெள்ள வாடி
துரிதமாய் அதற்குள் வாழ்வை ரசித்து வாழ்வோம் ஆடிப்பாடி
... நாட்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

46 ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் மூலம்



தாளம் : ஆதி ராகம் : ஸ்ரீ ராகம்

ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் மூலம்
அறிந்து கொண்டாலே போதும் அமையுமே பொற்காலம்
... ஆசை
பாசை மூடிய குளம் போல் ஆசை மூடிய மனம்
காசையே நினைக்குமது பூசை செய்தாலும் தினம்
... ஆசை
தடுக்கத் தடுக்க தொடர்ந்து வரும் கடலலைகள்
எடுக்க எடுக்க ஏகமாய் வளரும் களைகள்
ஒடுக்க ஒடுக்க ஓங்கியெழும் ஆசைகள்
ஒடுங்க ஒடுங்க - ஓம்காரமதிலே -
ஒடுங்க ஒடுங்க ஓயும் அதன் ஓசைகள்
... ஆசை

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

20 நிலையற்ற இவ்வுலகில்



தாளம் : ஆதி ராகம் : கிளிக்கண்ணி

நிலையற்ற இவ்வுலகில் நிச்சயம் இறப்பொன்றே
என்பதை நான் மறந்தேன்; கிளியே!
விலையற்றதை குவித்தேன்; விலைக்கு வாங்கி
விலையற்றதை குவித்தேன்!

வித வித சாத்திரங்கள் சொன்னபடி செய்து விட்டேன்
வீட்டையும், பெயரையும் மாற்றினேன், கிளியே!
விதியென்ற ஒன்றை மறந்தேன்; தலை
விதியென்ற ஒன்றை மறந்தேன்!

யோகம், யாகமும் செய்தேன்; கோவில்,
குளங்கள் சென்றேன்;
சோகங்கள் தீரவில்லை; கிளியே!
மோகமும் தீரவில்லை எதிலுமுள்ள
மோகமும் தீரவில்லை!

இயற்கையாய் எழும் பசியை செயற்கையாய் அடக்காமல்
இயல்பாக போக்கிக் கொள்வோம் கிளியே!
ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்!

பெண்களால் உருவாகி, பெண்களாலே உயர்ந்து
பெண்களை தூற்ற வேண்டாம்; கிளியே!
பெண்களை போற்றிடுவோம் ஞானமுடன்
பெண்களை போற்றிடுவோம்!

தத்துவங்கள் பேசித் தீர்த்தேன்; சித்துக்கள் பலவும் செய்தேன்
பத்து கோடி பேர் புகழ்ந்தார், கிளியே!
பித்தம் இன்னும் தெளியவில்லை நானெனும்
பித்தம் இன்னும் தெளியவில்லை!

வாங்கி விடும் மூச்சு சுழிமாறிப் போனால் போச்சு;
ஓங்கி பேசி செய்த வாதங்கள் கிளியே!
காற்றோடு போயாச்சு மூச்சு
காற்றோடு போயாச்சு!

கோடியில் நான் ஒருவன் எனும் நினைப்பே அனைத்து
குழப்பத்திற்கும் காரணம் கிளியே!
கோடியில் நானும் ஒருவன் என நினைப்போம்
கோடியில் நானும் ஒருவன்!

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

(34) ஞானம் வாய்ப்பது அரிதல்ல

Get this widget | Track details | eSnips Social DNA


தாளம் : ரூபகம் ராகம் : ஹரிகாம்போதி

ஞானம் வாய்ப்பது அரிதல்ல- பர
ஞானம் வாய்ப்பது அரிதல்ல
இன்றைக்கே, இப்பொழுதே, இக்கணமே வாய்த்திடும்
... ஞானம்

மோன நிலையில் ஆனந்தமயமாய் மிளிரும்
பேராற்றல் மனது வைத்தால் போதும்
... ஞானம்

அறிய வேண்டியதுள்ளிருக்க வெறும்
அறிவை பெருக்கல் ஞானமல்ல
வறியவர்க்கு உதவி வருத்தம் போக்காது
வானவர்க்கு செய்தல் ஞானமல்ல
அரிய பொருளென்று மயங்கி உலகில்
எதன் பின் ஓடுவதும் ஞானமல்ல
உரிய நேரத்தில் செய்ய வேண்டியதை
உதறித் தள்ளுவதும் ஞானமல்ல
... ஞானம்

நிலையில்லா வாழ்விதென்று புரிந்து நம் மனம்
நிலைக்கு வந்து விட்டால் அது ஞானம்
கலைந்து போகும் கனவுகள், கற்பனைகள்
கணிசமாய் குறைந்தால் அது ஞானம்
மலைகள், அருவிகள் பார்த்து நம் மனம்
மலைத்து நின்றாலும் அது ஞானம்
அலையும் மனதையும் அதனருளாலே
அனுபவித்தாலும் அது ஞானம்
... ஞானம்

யாருக்கும், எப்பொழுதும், எதுவும் நடக்குமென்
றோசனையிருந்தால் அது ஞானம்
தேருக்கு அச்சாணி போலே யாருக்கும்
தென்படாதிருந்தால் அது ஞானம்
ஊருக்கு உபதேசிப்பதை தானும்
உண்மையாய் பழகினால் அது ஞானம்
பேருக்கு ஆசைப்படாது பிறர்க்கு
பேருதவி புரிந்தால் அது ஞானம்
... ஞானம்

அட்டமாசித்திகளும், முக்காலம் உணர்வதும்,
அணிகலன் துறப்பதும் ஞானமல்ல
இட்டமாக நாம் விட்ட முடியை
மழிப்பதும் வளர்ப்பதும் ஞானமல்ல
திட்டமெதுவும் தீட்டாமல் துணிந்து
வருவதை ஏற்பதே ஞானம்
குட்ட குட்ட பணிவாய் குனிந்து
வெட்ட வெளிதனில் கலப்பதே ஞானம்!
... ஞானம்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

16 நானெனும் அகந்தையை நழுவவிட்டால்



தாளம் : ஆதி ராகம் : மாண்டு

நானெனும் அகந்தையை நழுவவிட்டால் எந்த
நாடும் வீடாகும்; இங்கு யாவரும் உறவாவர்;
தானாகி நிற்பதற்கு இருக்கும் தடைகள்
தவிடு பொடியாகும்: தன்னாலே
தவிடு பொடியாகும் : அதனால்
... நானெனும்

நாடுகள், மதங்கள், சமயங்கள், இனங்கள்,
மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
மொழிகள், சாதிகள், வகுப்புகள், மாநிலங்கள்,
பாடுபட்டு மனிதன் இவற்றைப் படைத்தான்;
பாதையை அடைது விட்டான்; அன்பிற்கான
பாதையை அடைது விட்டான்: அதனால்
... நானெனும்

மாடி மேல் மாடி கட்டி கோடி கோடி புதைத்து
மறைந்திடுவார் ஒரு நாள்; அவர்
மறைந்திடுவார் ஒரு நாள்;
வாடியவரைக் கண்டு, வாடி, வருந்தி
வயிற்றுக்கு ஈயமாட்டார்; மனமுவந்து
வயிற்றுக்கு ஈயமாட்டார் அதனால்
... நானெனும்

பட்டங்கள் பல வாங்கி பதவியிலமர்ந்து
பெருமைகள் சேர்த்துக் கொள்வார் தமக்கவர்
பொருள்களும் சேர்த்துக் கொள்வார்;
திட்டப்படி நகர்ந்தால் திமிராய் நடப்பார்;
தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்;
தலைகீழானால் தெய்வத்தைப் பழிப்பார்!
... நானெனும்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

36 மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்



தாளம் : கண்டசாபு ராகம் : சிவரஞ்சனி

மண்ணை,பெண்ணை, பொன்னை விரும்பும்
மானுடரே கேளுங்கள்
கண்ணை மூடி திறப்பதற்குள் காணோம்
சில லட்சம் பேர்கள்
... மண்ணை

பண்ணைத் தோட்டமும், வீடுகளும்
பாங்குடன் கட்டி அனுபவிப்பீர்
எண்ணை தீர்ந்து அணையும் விளக்கை
எள்ளளவும் எண்ணமாட்டீர்
... மண்ணை

லட்சியங்கள் நோக்கி நாம் நடை ஏதும் பயில வேண்டாம்
லட்சங்களை லட்சியம் நாம் லவலேசமும் செய்ய வேண்டாம்
பட்சமுடன் நாமிங்கே பசித்தவரை புசிக்க வைப்போம்
இட்சணமே சத்தியமென இகமீது வாழ்ந்திருப்போம்!
... மண்ணை

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

68 சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்



தாளம் : ஆதி ராகம் : மோகனம்

சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்
சந்தை ஆரவாரத்தில் தன்னையே தொலைத்திடுவார் இவர்
... சிந்

தந்தை, தாய், மனைவி, மக்கள், அடுத்தடுத்து மறைவர்
கந்தையே ஆனாலுமதை கஞ்சனாய் கட்டித் திரிவார்
... சிந்

நாடகம் முடிந்து திரை விழுந்த பின்னே
ஆடவந்தோர், பார்க்க வந்தோர் அனைவரும் சென்ற பின்னே
கூடவர யாருமின்றி, கூற்றுவன் வந்த பின்னே
ஏடெடுத்து இவர் கணக்கு பார்க்கும் விந்தை என்னே!
... சிந்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

42 பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்



தாளம் : ஆதி ராகம் : ரவிச்சந்திரிகா

பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்
நாடி அடங்கும் முன்னர் நன்மை பலவும் செய்வோம்
... பாடி

கோடிப் பணத்தை சேர்க்கும் முயற்சிகள் எதுவும் வேண்டாம்
வாடி, உதிரும் வாழ்க்கையிது யாரும் மறக்க வேண்டாம்
... பாடி

திட்டம் பலவும் தீட்ட தினங்கள் மெள்ள நகரும்
விட்டவற்றை பிடிக்க விடாமுயற்சிகளும் தொடரும்
கிட்ட கிட்ட வரும் வெற்றி கைக்கு வந்தும் இடறும்
எட்டயிருந்த எமபயம் எதிர்வந்து மெள்ள படரும்!
... பாடி

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

38 காலம் வரும் போது அந்த காலன் வருவான்



தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : சுபபந்துவராளி

காலம் வரும் போது அந்த காலன் வருவான்
காலன் அவன் வந்தால் நம் காலமும் முடியும்
... காலம்

ஞாலம் தோன்றிய நாள் முதலாக
காலம் தவறாமல் நடந்திடும் ஜாலமிது
... காலம்

சுற்றியுள்ளோர் தினம் தினம் சப்தமின்றி மறைவர்
முற்றிலும் அதை மறந்திவர் கோட்டைகள் கட்டுவார்
வெற்றியையே எதிலும் தேடி வெறியுடன் ஓடுவார்
பற்றின்றி வாழ மறந்து பட்டென்று இவரும் மறைவார்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

48 பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா


தாளம் : ஆதி ராகம் : புன்னாகவராளி

பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா; நாம்
வீடு சேர வழி ஒன்றென்றே பாடு பாப்பா
... பாடு

காடு மேடெல்லாம் களைத்துத் திரிய வேண்டாம்
மாடு மக்கள் எதையும் வீணாய் பிரிய வேண்டாம்
பாடு பட்டு பணத்தை பதுக்கவும் வேண்டாம், பின்
கூடு விட்டு போகும் போது கூவியழவும் வேண்டாம்
... பாடு

இல்லையென்போருக்கு நாம் இருப்பதை கொடுப்போம்
தொல்லையில் உழல்வோரின் துயர்தனை துடைப்போம்
எல்லையில்லா பிரபஞ்ச வெளிதனை நினைப்போம்
சொல்லாமலே மனம் விரிவதை ரசிப்போம்
... பாடு

எந்த நம்பிக்கையிலும் நம்மை நாம் இழக்காமல்
வந்த வேலையை செய்வோம் மனம் சற்றும் சலிக்காமல்
சொந்த லட்சியம் ஏதும் இல்லவே இல்லாமல்
இந்த நிமிடம் மட்டும் முழுதுமாய் வாழ்ந்திடுவோம்.
... பாடு

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

2 பூதங்கள் ஐந்தும்



தாளம் : ஆதி ராகம் : செஞ்சுருட்டி

பூதங்கள் ஐந்தும் தன் மாத்திரைகள் ஐந்துமாய்
பேதங்களானது ஒன்றே ஒன்று
... பூதங்கள்

சேதங்கள் ஏதுமின்றி உயிர்களிலே அது வாதங்கள்
செய்யும் மனமாகவும் ஆனது
... பூதங்கள்

கல்லுக்குள் உள்ள சிற்பம் கைத்திறனால் வெளிப்படலாம்.
வில்லுக்குள் உள்ள அம்பு நாணேற்ற புறப்படலாம்.
எள்ளுக்குள் எண்ணையாக பாலுக்குள் வெண்ணையாக
உள்ளுக்குள் உறையுமதை அது நினைத்தாலே உணருவோம்!
... பூதங்கள்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

14 வானாகி, மண்ணாகி



தாளம் : ஆதி (திஸ்ர நடை) ராகம் : ஆனந்தபைரவி

வானாகி, மண்ணாகி, காற்றாகி, கனலாகி, நீராகிய பின்னே
ஊனாகி உயிர்களாகி நின்றாய்; பின் மனமாகவும்
மாற்றம் கொண்டாய்
... வா

நானாகயிருக்கும் வரை நான் வேறு நீ வேறு
தானாகிப் போவதுதான் கிடைத்தற்கரிய பேறு
... வா

பொல்லாத உயிர்களும் புனிதமாய்த் தெரிய வேண்டும்
இல்லாத பேர்களுக்கு இன்முகத்துடன் ஈய வேண்டும்
கல்லாக உள்ள நெஞ்சம் கனிவாக குழைய வேண்டும்
எல்லோரும், எல்லாமும் நீயாய் நான் காண வேண்டும்.
... வா

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

32 சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை



தாளம் : ஆதி ராகம் : காம்போதி

சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை
சுகமளித்து காத்திடுவாய் நீ என்னை
... சக

இகத்திலுள்ள இன்பங்கள் துன்பத்தில்தான் முடியும்
அகமெலாம் நீ நிறைந்தாலே எனக்கு விடியும்; அதனால்
... சக

வாழ்விது மாயம்; நடப்பதெல்லாம் நாடகம்;
தாழ்வது வரும் போது மட்டும் இது என் தாரகம்
வாழ்வது வந்துவிட்டால் வெளுத்துவிடும் சாயம்
வீழ்ந்து கிடப்பதே நான் உய்வதற்கு உபாயம்!
... சக

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

52 குரு பெயர்ந்தாலென்ன?



தாளம் : ஆதி ராகம் : சாவேரி

குரு பெயர்ந்தாலென்ன? சனி பெயர்ந்தாலென்ன?
கருவிலேயே அனைத்தும் முடிவானபின்னே
... குரு

வருவது வரட்டுமே; போவது போகட்டுமே;
தருவதும் பறிப்பதும் அதன் செயலான பின்னே
... குரு

வாங்கிவிடும் மூச்சும் அதனருளாலே
தூங்கி நாம் விழிப்பதும் அது நினைத்தாலே
பாங்குடன் கோள்களை தாங்கி நிற்பததுவே
ஓங்காரமதில் ஒடுங்க தருணம் இதுவே!
... குரு

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

12 நம்மால்தான் முடியுமென்ற நினைப்பு


தாளம் : ஆதி ராகம் : ஹம்ஸநாதம்

நம்மால்தான் முடியுமென்ற நினைப்பு வெறும்
நானெனும் செருக்கால் வரும் தவிப்பு;
... நம்

சும்மாயிருந்தாலும் நடக்கும் காரியம் நாம்;
ஆனாலது அம்மாதிரியிருக்க விடாது முடுக்கும்
... நம்

பரமிடும் கட்டளையை மதித்து நாம்
உரமிடுவோம் விதை விதைத்து
சிரமம் பாராது நாம் உழைத்து; பின்
வருவதை ஏற்போம் கரம் குவித்து!
... நம்

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்

60 தனிமை தருவது திகட்டாத இனிமை



தாளம் : ஆதி ராகம் : கரகரப்பிரியா

தனிமை தருவது திகட்டாத இனிமை
துணிந்ததை பழகிவிட்டால் மனதில் தங்குமே இளமை
... தனி

கனிவையும், பணிவையும் களிப்புடன் அளிக்குமது
முனிவரும் கூட உணர்ந்த முழு உண்மையிது
... தனி

புதையலைத் தேடி பொழுதை போக்காது
கதைகள் பல பேசி காலத்தை கடத்தாது
எதையும் அடைவதை இலக்காய் கொள்ளாது
சிதைக்கு போகும் உடலை சதமென நினையாதிருக்க உதவும்
... தனி

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்